அண்மையில் ஜெட் ப்ளு விமானம் காற்று கொந்தளிப்பில் சிக்கியது, இதன் போது சூடான தேனீர் தம்மீது ஊற்றியதாகவும் இதனால் தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் குறித்த பெண் பயணி குற்றம் சுமத்தியுள்ளார்.
தமக்கு ஏற்பட்ட காயங்களுக்காக விமான சேவை நிறுவனம் 1.5 மில்லியன் டாலர்கள் நட்ட ஈடு வழங்க வேண்டும் என குறித்த பெண் கோரியுள்ளார்.
தாஜானா லூயிஸ் (Tahjana Lewis) என்ற பெண்ணே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே மாதம் 15 ஆம் திகதி இந்த பெண், ஜெட் ப்ளூ விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 2237 என்ற விமானத்தில் அமெரிக்காவின் ஒர்லாண்டாவிலிருந்து ஹார்ட்போர்ட் நோக்கி பயணித்திருந்தார்.
இதன் போது ஏற்பட்ட காற்று கொந்தளிப்பு நிலைமையிலினால் பயணிகள் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டிருந்தது.
ஜெட் ப்ளூ விமான சேவை நிறுவனம் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் பாதுகாப்பாக பயணிப்பதற்கு ஏற்பாடு செய்யவில்லை எனவும் குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தமக்கு ஏற்பட்டுள்ள தழும்புகள் மறையாது எனவும், இதற்கு ஜெட் ப்ளூ நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் லுயிஸ் தெரிவித்துள்ளார்.
காற்றுக் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருந்த நிலையில் விமான பணியாளர்கள் தேவை இன்றி மிதமிஞ்சிய அளவிலான சூடு தேனீரை விநியோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விமான பணியாளர்கள் தமக்கு உரிய முதலுதவி வழங்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தீக்காயங்களில் காரணமாக உளரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தமக்கு உரிய நட்டையீடு வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.