அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி, பெலிகஹா நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த பணிகளை கே.என்.சொக்ஸி போன்ற சட்டத்தரணிகளுடனேயே முன்னெடுத்தாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேளையில் சொக்ஸி இறைபதம் அடைந்திருந்த காரணத்தினால் அந்த பணிகளை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் கையளிக்க வேண்டியிருந்தாகவும் குறிப்பிடடுள்ளார்.
அந்த நேரத்தில் அவரின் தவறு காரணமாகவே தற்போது சிக்கலான நிலைமை உருவாகியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனையிட்டு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
யுத்தம் இருந்தாலும், கலவரங்கள் ஏற்பட்ட போதிலும் 1931 ஆம் ஆண்டு முதல் ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் ஜனநாயகத்தைப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை ஆகும் என தெரிவித்துள்ளார்.