உலகில் அடுத்தடுத்து விமான விபத்துக்கள் பதிவாகி வருகின்றமை விமானப் பயணிகளை பெரிதும் பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.
கனடாவில் ஹாலிபெக்ஸ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தென்கொரியாவில் பாரிய விமான விபத்து பதிவாகி சில மணித்தியாலங்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஹாலிபெக்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானது.
எயார் கனடா விமானத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தினைத் தொடர்ந்து விமான நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பால் விமான சேவை நிறுவனத்தினால் இயக்கப்படும், எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தின் தரையிறக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும் கியரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் இதனால் விமானத்தில் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தரையிறக்கப்பட்ட போது விமானம் சமனிலையை இழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக ஹாலிபெக்ஸ் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எனினும், இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கே.எல்.எம். றோயல் டச் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
போயிங் 700-800 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
நோர்வேயின் ஒஸ்லோ டோர்ப் சான்ட்போட்ஜ் விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விமானம் ஓடு பாதையை விட்டு விலகி புல்வெளியில் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் 176 பயணிகளும் 6 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
எவ்வாறெனினும், இந்த விபத்தின் போது பயணிகளுக்கோ அல்லது விமான பணியாளர்களுக்கோ ஆபத்து எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விமானங்கள் பல்வேறு இடங்களில் விபத்துக்குள்ளான காரணத்தினால் பயணிகள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.