சுவிட்சர்லாந்தின் புகழ்பூத்த பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான சிவா டிரவல் (Siva Travel) நிறுவனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் குறித்து சுவிட்சர்லாந்தின் முன்னணி ஊடகம் ஒன்றினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னணி ஊடகங்களில் ஒன்றான பிலிக் (blick.ch) தகவல்களை வெளியிட்டுள்ளது.
பேர்னில் இயங்கி வரும் குறித்த பயண முகவர் நிறுவனத்தை இலக்கு வைத்து மற்றும் ஒரு பயண முகவர் நிறுவனம் இவ்வாறு காழ்ப்புணர்ச்சியுடன் செயற்பட்டு உள்ளமை தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
நிறுவனங்கள் தொடர்பில் இணையத்தில் மதிப்பீடுகளை வெளியிடும் கூகுள் ரிவ்யூ முறையை பயன்படுத்தி இந்த சேறு பூசல் சதி முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சூரிச்சில் இயங்கி வரும் மற்றும் ஒரு போட்டி பயண முகவர் நிறுவனம் இந்த சதி முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், ஈப்ளை (Efly) என்ற போட்டி நிறுவனம் எந்தவிதமான குற்றச் செயலையும் மேற்கொள்ளவில்லையே என தெரிவித்துள்ளது.
சிவா டிராவல் பயண முகவர் நிறுவனம் பேர்னில் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.
70 வயதான சிவநேயன் கனகசுந்தரம் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து ஆசிய மற்றும் அராபிய நாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளே சிவா டிரவல் நிறுவனத்தின் அதிகளவு வாடிக்கையாளர்களாக காணப்படுகின்றனர்.
இதுவரையில் இந்த பயணமுகர் நிறுவனத்தின் சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் மிகுந்த திருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
எனினும் கடந்த சில வாரங்களாக குறித்த பயண முகவர் நிறுவனர் தொடர்பில் கூகுள் மதிப்பாய்வில் (Google review) பகுதியில் மோசமான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
தமது நிறுவனத்திற்கு எதிராக இவ்வாறு பிழையான தகவல் பரப்பும் செயற்பாட்டின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தமக்குத் தெரியும் எனவும் அதற்கு என்ன காரணம் என்பதும் தமக்கு தெரியும் என சிவநேயன் தெரிவிக்கின்றார்.
ஈப்ளை நிறுவன வாடிக்ககயாளர் ஒருவர் தம்மிடம் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவிக்கின்றார்.
தனக்கு ரிவ்யூ (மதிப்பாய்வு) எழுதத் தெரியாத காரணத்தினால் தான் ஈப்ளை நிறுவனத்தின் பணியாளர் ஒருவரிடம் தனது அலைபேசியை வழங்கியதாகவும் அந்த பணியாளர் சிவா டிராவல் நிறுவனத்திற்கு எதிரான வகையில் பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு செய்வதன் நோக்கம் என்ன? இவ்வாறு செய்யப்படுவதன் நோக்கத்தை முழுமையாக தான் அறியவில்லை என சிவநேயன் கனகசுந்தரம் தெரிவிக்கின்றார்.
சிவா ட்ராவல் பயணமுகர் நிறுவனத்தை போன்றே Efly நிறுவனமும் ஓர் பயண முகவர் நிறுவனம் எனவும் இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிவா டிரவல் நிறுவனத்தின் போட்டி நிறுவனமே இந்த Efly நிறுவனம் என அவர் குறிப்பிடுகின்றார்.
தம்மை அவமானப்படுத்தும் நோக்கில் இவ்வாறு கூகுளில் மதிப்பாய்வில் எழுதப்படுவதாக கனகசுந்தரம் தெரிவிக்கின்றார்.
இதுவரையில் நிறுவனத்துடன் நேரடியாக எவ்வித மோதல்களும் போட்டிகளும் இருந்ததில்லை எனவும் உரிமையாளரை நேரடியாக சந்தித்தது கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அந்த நிறுவனம் தம்மை இழிவுபடுத்த முயற்சிப்பதாகவும், தாம் அந்த நிறுவனத்தை போட்டியாக கருதவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது வழமையான வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த வேண்டும் சேவை வழங்க வேண்டும் என்பதே நோக்கம் எனவும் தமது பணியில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் Efly நிறுவனத்தின் உரிமையாளர் செல்வகுமார் நாகதீபனிடம் ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறு எனினும், தாம் எந்தவொரு செயலில் ஈடுபடவில்லை என செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தமது வாடிக்கையாளர்கள் வழங்கும் மதிப்புரைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் தங்களுக்கு போதிய அளவு திருப்தியான வாடிக்கையாளர்கள் உள்ளனர் எனவும் நிறுவனங்கள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விரும்பிய தரப்படுத்தலை வழங்குவதாகவும் செல்வகுமார் தெரிவிக்கின்றார்.
எனினும் 120 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இரண்டு பயண முகவர் நிறுவனங்கள் தொடர்பிலான மதிப்பாய்வுகளின் போது எவ்வாறு ஒரு நிறுவனத்தின் மீது சாதகமான மதிப்பாய்வும் மற்றொரு நிறுவனம் மீது பாதகமான மதிப்பாய்வும் மேற்கொள்ளப்படுகின்றது என்பது கேள்விக்குறியேயாகும். இவ்வாறு தற்செயலாக நடக்கக்கூடிய சாத்தியமில்லை.
எனினும் இந்த விடயம் குறித்த கேள்விக்கு செல்வகுமார் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
தாம் தற்செயலாக கூகுள் மதிப்பாய்வுகளை பார்வையிட்டதாகவும் இதுவரையில் தமது வியாபாரத்திற்கு இந்த மதிப்பாய்வுகளினால் நேரடியாக தாக்கம் ஏற்பட்டதாக தெரியவில்லை எனவும் சிவநேயன் தெரிவிக்கின்றார்.
எவ்வாறு எனினும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் சேறு பூசவும் ஏன் அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
இந்த மதிப்பாய்வுகளை அகற்றுமாறு சிவநேயன் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுக்க முயற்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் கூகுளிற்கு அறிவிக்கப்பட்டதாகவும், நான்கு நாட்களில் பதிலளிப்பதாக கூகுள் கூறிய போதிலும் இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
போட்டியாளர்கள் வியாபார முயற்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் செய்யும் இவ்வாறான அவதூறு பிரசாரங்களை தடுத்து நிறுத்த ஏதேனும் வழியுண்டா என சிவநேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலியான மதிப்பாய்வுகளை கண்டு பிடிக்கக்கூடிய அதி நவீன செயற்கை நுண்ணறிவு அல்கோரிதங்கள் பயன்படுத்தப்படுவதாக கூகுள் கூறிய போதிலும் சிவா டிரவல் நிறுவன கூகுள் மதிப்பாய்வில் அந்த விடயத்தை காண முடியவில்லை.
சிவா டிரவல் நிறுவனத்தின் சேவை தரத்தை மதிப்பாய்வுக்கு உட்படுத்தி ஒரு நட்சத்திரமும், Efly நிறுவனத்தின் சேவை தரத்தை மதிப்பாய்வுக்கு உட்படுத்தி ஐந்து நட்சத்திரமும் வழங்கப்பட்டுள்ளதனை மதிப்பாய்வுகளில் காண முடிகின்றது.
எனினும் இவ்வாறு போட்டி நிறுவனங்கள் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளும் சேறு பூசல்களினால் நிறுவனங்களின் நன்மதிப்பிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பினை ஈடு செய்வதற்கு கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இன்றியமையாதது.