தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியினரை வேட்டையாடும் நடவடிக்கைகளை அணுர அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அரசாங்கம் வழக்குகளை உருவாக்கி அரசியல் எதிரிகளை பழி வாங்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது சகோதரரை கைது செய்தமை ஓர் ஊடக கண்காட்சி நாடகம் என விமர்சனம் செய்துள்ளார்.
பல வாகனங்களை அனுப்பி பெலியத்த பகுதியில் தமது சகோதரரை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக வருமாறு அழைக்கப்பட்டு இருந்தால் தமது சகோதரர் யோஷித தாமாகவே முன்வந்து வாக்கு மூலம் அளித்திருப்பார் என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த அரசாங்கம் ஊடக கண்காட்சிகளை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவின் பொறுப்பதிகாரையே தற்பொழுது பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றி வருவதாகவும் அவர் அரசியல் ரீதியாக அன்று தொடங்கிய பழி வாங்கும் படலத்தை தொடர்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த அரசாங்கம் தற்போது மக்களுக்கு சேவை வழங்குவதை விடுத்து பழிவாங்கல்களில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.