நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 12 சீனப் பிரஜைகளை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளாக நாட்டுக்குள் பிரவேசித்து வீசா காலம் பூர்த்தியானதன் பின்னர் தங்கியிருந்த சீனப் பிரஜைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர்.
12 சீனப் பிரஜைகள் மற்றும் ஒரு வியட்நாம் பிரஜையை இவ்வாறு நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுணவெல நேற்று உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறியதாக இந்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமைக்காக இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்ற போதிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் அவர்களை நாடு கடத்த உத்தரவிடுவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களின் பெயர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த நபர்களுக்கு தலா 50000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.