இலங்கையில் தேசிய மக்கள் மத்திய அரசாங்கத்தினால் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறை தொகை 2200 பில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்கவினால் இன்றைய தினம் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 4990 பில்லியன் ரூபா எனவும் மொத்த செலவுகள் 7190 பில்லியன் ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் துண்டு விழும் தொகை 2200 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தொகை 40 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை காலம் 24450 ரூபாய் ஆக வழங்கப்பட்ட ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் 40000 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது.
புலமை பரிசில் கொடுப்பனவுத் தொகை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தொகை என்பன அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தில் சுகாதாரத்திற்காக அதிகூடிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்திற்காக இம்முறை 604 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளுக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் அனைவரும் உரிய முறையில் வரி செலுத்த வேண்டும் என கோரியுள்ளார்.
உரிய முறையில் வரி செலுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலவி வரும் தேங்காய் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக புதிய மூலோபாயங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நெல் கொள்வனவு செய்வதற்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் நடவடிக்கையை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட பிரஜைகளுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாகவும் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.