இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கணேமுள்ள சஞ்சீவ என்ற பாதாள உலகம் குழு தலைவரின் படுகொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றது.
சட்டத்தரணி ஒருவரை போன்று வேடம் அணிந்து வந்த நபர் ஒருவர் கணேமுள்ள சஞ்சீவவை நீதிமன்றத்திற்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருந்தார்.
துப்பாக்கிதாரிக்கு உதவியதாக மற்றும் ஒரு பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பெண் பிரபல போதை பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த படுகொலை சம்பவத்தை மேற்கொள்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்த பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இதற்கு முன்னர் பல்வேறு படுகொலை சம்பவங்களை மேற்கொண்டு உள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
துபாயில் தற்பொழுது மறைந்து வாழும் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியான கெஹல்பத்தர பத்மு என்ற நபர் இந்த ஒப்பந்தத்தை தமக்கு வழங்கியதாகவும் முற்பணமாக 2 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக பணத்தை இந்தியாவில் வைத்து வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு குற்ற விசாரணை பிரிவினால் குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்வதற்காக போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண் மினுவன்கொட பகுதியில் அமைந்துள்ள வீடுகளில் தங்கி இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண் போதை பொருள் கடத்தல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே சிறையில் தண்டனை அனுபவித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் இந்த கொலையினையும் மேற்கொண்டு விட்டு இந்தியாவிற்கு தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் போலீஸ் விசேட அதிரடிப்படையினர் புத்தளம் பாலவியய பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.
இந்த படுகொலை சம்பவம் மேற்கொள்வதற்கான திட்டம் துபாயில் வகிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணிகள் பயன்படுத்தக்கூடிய சட்டத்தரணிகளின் அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டு இந்த கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாளர் சிங்கள வானொலி ஒன்றுக்கு துபாயிலிருந்து பாதாள உலகக் குழு தலைவர் ஒருவர் நேர்காணல் வழங்கியுள்ளார்.
தாங்கள் இந்த படுகொலையை மேற்கொண்டதாக குறித்த நபர் whatsapp மூலம் தெரிவித்துள்ளார்.
தனது தந்தையை படுகொலை செய்த காரணத்தினால் அதற்கு பலி தீர்க்கும் நோக்கில் இந்த படுகொலையை மேற்கொண்டதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலை உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனவும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.