சுவிட்சர்லாந்தில் ரயில் பாலங்கள் ஆய்வுக்காக புதிய செயற்கை நுண்ணறிவு முறைமையை உருவாக்கியுள்ள ஆராய்ச்சியாளர்கள்
சூரிக் (Zurich) நகரிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், புதிய செயற்கை நுண்ணறிவு (AI) முறைமையின் மூலம் ரயில் பாலங்களின் நிலைத்தன்மையை சரிபார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஃபெடரல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ETH Zurich வெளியிட்ட அறிக்கையில், இந்த புதிய கருவி பாலங்களை பரிசோதிக்க முன்னுரிமைகளை தீர்மானிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
இது எந்த பாலங்களுக்கு உடனடி கவனம் தேவை என்பதைக் கண்டறியச் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் பல கான்கிரீட் ரயில் பாலங்கள் உள்ளன. “நாட்டின் பெரும் பகுதி உள்கட்டமைப்பு அதன் ஆயுட்காலத்தினை அடைந்து விட்டதால், அவை பரிசோதிக்கப்பட்டு தேவைப்பட்டால் பலப்படுத்தப்பட வேண்டும்,” என இந்த AI முறைமையை உருவாக்கிய சோபியா குஹ்ன் (Sophia Kuhn) கூறியுள்ளார்.
மெஷின் லேர்னிங் (Machine Learning) தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம் (Swiss Federal Railways) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது அர்டிஃபிஷியல் நியூரல் நெட்வொர்க் (Artificial Neural Network) மூலம் இயங்குகிறது. மனித மூளை போல, தரவுகளிலிருந்து கற்றுக்கொண்டு முடிவுகளை எடுக்கும் திறன் இதில் உள்ளது.
இந்த முறைமையின் முக்கியமான பலன் என்னவெனில், இது ஒரு பாலம் நிலையாக இருக்கிறதா என்பதை மட்டுமல்ல, அதன் மதிப்பீடு எவ்வளவு நம்பகமானது என்பதையும் வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.