அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஏற்றுமதிகள் மீது 25% வரி (tariff) விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
“ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை ஏமாற்ற உருவாக்கப்பட்டது” என அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
“அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து எல்லாவற்றையும் வாங்குகிறது எனவும் ஆனால், அவர்கள் எங்களிடம் இருந்து எதையும் வாங்குவதில்லை எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க கார்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அதிக வரி விதிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க கார்கள் மீது 10% வரி விதிக்கிறது, இது அமெரிக்கா, ஐரோப்பிய கார்களுக்கு விதிக்கும் வரியை விட 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இறக்குமதி செய்யப்படும் பிக்-அப் லாரிகள் (Pick-up trucks) மீது ஏற்கனவே 25% வரி விதித்து வருகிறது.
இதேவேளை, ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகள் மற்றும் வரி திட்டத்திற்கு ஐரோப்பிய ஆணையம் (European Commission) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
“முறையற்ற வரிகள் விதிக்கப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது உலகின் மிகப்பெரிய சந்தையாக இருக்கின்றது. இது அமெரிக்காவுக்கு பல நன்மைகளை வழங்கியுள்ளது. எங்கள் தொழில்கள், பணியாளர்கள் மற்றும் நுகர்வோரைக் காக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியுடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் கருத்துக்கு ஐரோப்பிய தலைவர்கள் பலரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.