எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையேயான மோதல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் நாளை முதல் முழுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
அரசாங்கம் 3% இலாப விகிதத்தை நீக்கியதையடுத்து, எரிபொருள் விநியோகஸ்தர்கள் புதிய எரிபொருள் கொள்வனவுகளை முழுமையாக நிறுத்தம் விதிக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலைமை மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப குவிந்துள்ளனர். இதன் காரணமாக சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சில தனியார் விநியோகஸ்தர்கள் தங்களது வருமானத்தைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய கட்டண முறையை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
சில எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் அவர்களின் நிலை மோசமாகி வருவதாகவும், புதிய கட்டண முறையின் காரணமாக பெரிய நட்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எரிபொருள் விநியோகஸ்தர்கள் நாளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
ஆனால், புதிய கொள்வனவு கட்டளைகளை தொடர மறுப்பதற்கான தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசாங்கம் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
எனினும், எரிபொருள் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.