இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் உக்ரைனுக்கு ஆதரவாக மற்றும் ரஷ்யாவை எதிர்கொள்ள நான்கு அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து “தயாரான நாடுகளின் கூட்டணி” உருவாக்கி, உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்த அமெரிக்காவை உடன்படச் செய்ய முயல்கின்றன.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியும் 18 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, “நாங்கள் வலுவான ஆதரவை உணர்கிறோம். நீண்ட காலமாக இல்லாத அளவிற்கு ஐரோப்பிய ஒற்றுமையாக காணப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இம்மாநாடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே வெள்ளி கிழமை வெடித்த சர்ச்சைக்குப் பிறகு நடைபெற்றது.
நான்கு அம்சத் திட்டத்தின் முக்கிய புள்ளிகள்:
உக்ரைனுக்கு இராணுவ உதவி தொடர்ந்து வழங்கப்படும், மேலும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார அழுத்தம் அதிகரிக்கப்படும்.
நிலையான சமாதானம் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையிலும் உக்ரைன் இருக்க வேண்டும்.
சமாதான உடன்படிக்கையின் பின்னர், உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து எதிர்கால தாக்குதல்களைத் தடுக்கும்.
சமாதானத்திற்குப் பிறகு அதை உறுதி செய்ய “தயாரான நாடுகளின் கூட்டணி” உருவாக்கப்படும்.
மேலும், உக்ரைனுக்கான 5000 க்கும் அதிகமான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய £1.6 பில்லியன் (அமெரிக்க டாலரில் $2 பில்லியன்) கடன் அளிப்பதையும், உறைந்திருக்கும் ரஷ்ய சொத்துகளின் இலாபத்திலிருந்து £2.2 பில்லியன் கடன் வழங்குவதையும் ஸ்டார்மர் அறிவித்தார்.
“கடந்த காலத்தின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ரஷ்யா எளிதில் மீறக்கூடிய பலவீனமான சமாதானம் எங்களுக்கு வேண்டாம். எந்தவொரு உடன்படிக்கையும் வலுவாக இருக்க வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சி மாநாட்டில் பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், துருக்கி, நார்வே, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, பின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கனடா போன்ற நாடுகள் கலந்து கொண்டன.
“ஐரோப்பாவை மீண்டும் ஆயுதமயமாக்கும் அவசியம் உள்ளது” என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் உருசலா வான் டெர் லேயன் குறிப்பிட்டார்.
“உக்ரைன் தொடர்ந்து போராடுவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேலோங்கி செயல்பட வேண்டும்” என்று நேடோ செயலாளர் ஜெனரல் மார்க் ருட்டே தெரிவித்தார்.
இதேவேளை, உச்சி மாநாட்டிற்குப் பின்னர், உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, இங்கிலாந்தின் சாண்ட்ரிங்காம் அரண்மனைக்கு சென்று மன்னர் சார்லஸை சந்தித்தார்.
இதேவேளை, செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான கடுமையான சந்திப்பினால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே விரிசல் உருவாகும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.