சுவிட்சர்லாந்தில் விமானப் பயணிகளின் தரவுகளை பகிரும் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் பல நாடுகள், பயணிகளின் தரவுகளைப் பகிரும் முறையை கடைபிடிக்க ஆரம்பித்திருந்தது.
மார்ச் 5ஆம் திகதி மாநிலங்களவை (Council of States) ஒரு புதிய பிரேரணையை நிறைவேற்றியது.
ஏற்கனவே, தேசிய கவுன்சில் (National Council) டிசம்பரில் இதனை அனுமதித்தது.
இந்த சட்டம், சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் பயணிகள் தகவல்களை பகிர்வதற்கும் செயல்படுத்துவதற்கும் விதிகளை வகுக்கிறது.
பயணி பெயர் பதிவேடு (PNR) என்ன?
PNR (Passenger Name Record) என்பது பயணிகளின் தகவல்களை கண்காணித்து, பாதுகாப்பு அபாயமுள்ளவர்களை அடையாளம் காண உதவும் தரவுத்தள அமைப்பு ஆகும்.
இதன் கீழ், பயணிகளின் பெயர், பயணிக்கும் இடம், கட்டண முறைகள், உடன் எடுத்துச் செல்லும் பொதி வகைகள் போன்ற தகவல்கள் சேகரிக்கப்படும்.
இந்தச் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?
இத்தனை ஆண்டுகளாக, சுவிட்சர்லாந்து PNR தரவுகளை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற நாடுகளுடன் பகிராமல் இருந்தது. இதனால், EU-வின் கண்காணிப்பு முறையை தவிர்க்க, பயணிகள் சுவிட்சர்லாந்து வழியாக சென்று ஐரோப்பாவுக்குள் நுழைய முடிந்தது.
ஆனால், சுவிஸ் விமான நிறுவனங்களுக்கு பிற நாடுகளில் இயங்குவதற்கான உரிமை ரத்து செய்யப்படலாம் என்ற அபாயம் ஏற்பட்டதால், இது கட்டாயமாக்கப்பட்டது.
விசா விலக்கு திட்டத்தில் (Visa Waiver Program) இருந்து சுவிட்சர்லாந்தை நீக்குவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதேபோல், ஐரோப்பிய ஒன்றியமும் இது தொடர்பாக கடுமையான அழுத்தம் கொடுத்திருந்தது.
புதிய பயணிகள் தகவல் பிரிவு Passenger Information Unit (PIU) எனும் குழு, பயணிகள் பட்டியலை பயணத்திற்கு ஒரு நாள் முன்பும், விமானம் புறப்படும் முன்பும் பரிசோதிக்கும்.
இது, பயணிகள் தீவிரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், அல்லது பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களா என்பதை கண்காணிக்கும்.
மீள்பார்வையின் போது சந்தேகத்திற்கு இடமான தகவல் இருந்தால், அந்த பயணியை விமானம் ஏறுவதிலிருந்து தடுத்து நிறுத்தப்படும்.
சுவிஸின் தனியுரிமை சட்டங்களுக்கேற்ப, இந்தச் சட்டத்துக்கு எதிராக சில குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வலதுசாரி SVP மற்றும் பசுமை கட்சி (Greens) பயணிகள் தரவுகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த அரசு, தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய பயணிகளைத் தவிர மற்ற எல்லா பயணிகளின் தகவல்களும் 6 மாதங்களில் நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.