இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் வந்து அவரின் அனுபவத்தின் அடிப்படையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள்
நேற்று ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், தற்போதைய அரசாங்கத்தின் சில திட்டங்கள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினர்
தற்போதைய அரசாங்கம், மருத்துவ அதிகாரிகளின் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்கின்ற செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதற்கு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில் குறித்த பிரச்சனை உட்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடினர்.
இதன் போது, அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் வந்து சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்
இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
எனினும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத ரணில் விக்ரமசிங்க, தாம் தற்போது அரசியலில் ஓய்வு நிலையை அனுபவித்து வருவதாகவும் எனினும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு தாம் ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.