அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் (ATC) பற்றாக்குறை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்று தேசிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்ற உபக்குழு முன் சாட்சியமளிக்கையில், நாட்டின் பாதுகாப்பான விமானப் போக்குவரத்துக்கு குறைந்தது 3,000 புதிய விமான கட்டுப்பாட்டாளர்கள் தேவை என அமெரிக்கா முழுவதும் 10,800 ATC-களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தின் தலைவர் நிக் டேனியல் தெரிவித்துள்ளார்.
இந்த பற்றாக்குறையின் விளைவாக, பலர் வாரத்திற்கு ஆறு நாட்கள், தினமும் 10 மணிநேரம் வேலை செய்வதாகவும், இது அவர்களுக்கு பல ஆண்டுகளாக ஒரு இயல்பான சூழலாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பின்னணியில், விமான கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறை சில முக்கியமான விமானப் பயண சம்பவங்களில் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த ஜனவரியில், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் ஒரு வணிக ஜெட் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் இடையே மோதல் ஏற்பட்டது, இதில் 67 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 2023-ல் இடம்பெற்ற ஒரு விமான விபத்தின் முக்கிய காரணமாக, ஒரு விமான கட்டுப்பாட்டு அதிகாரி வேறு ஒரு விமானத்தை கவனித்ததால் கவனம் சிதறியது என்று அண்மைய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் புதிய விமான கட்டுப்பாட்டாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் வேகமான ஆட்சேர்ப்பு முறையை அறிவித்துள்ளது.
ஆனால், 31 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்ற நிபந்தனை, ஆட்சேர்ப்பு பிரச்னையை இன்னும் மோசமாக்குகிறது.
FAA (Federal Aviation Administration) விதிகளின்படி, ATC-கள் கட்டாயமாக 56 வயதில் ஓய்வுபெற வேண்டும்.
சில குறுகிய விலக்கு விதிகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் 50 வயதிலேயே ஓய்வுபெறும் வாய்ப்பு உள்ளது.
எலோன் மஸ்க் தலைமையிலான அரசு திறன் மேம்பாட்டு துறை, ஓய்வு பெற்ற விமான கட்டுப்பாட்டாளர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைத்துள்ளது.
ஆனால், கட்டாய ஓய்வு வயது வரம்பு காரணமாக இதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
FAA-வின் பயிற்சி மற்றும் தேர்வுத் தரநிலைகள் மிகவும் கடினமாக இருப்பதால், விண்ணப்பிக்கும் அனைவரில் 10% மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
மேலும், 3-4 ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பிறகே விமான கட்டுப்பாட்டாளர்கள் முழுமையான பொறுப்புகளை ஏற்க முடியும்.
போதிய எண்ணிக்கையில் விமான கட்டுப்பாட்டாளர்களை நியமிக்க, அமெரிக்க போக்குவரத்து துறை அமைச்சர் ஷீன் டஃபி புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.