19.6 C
Switzerland
Monday, May 19, 2025

Airbus A220 விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள்

Must Read

சுவிஸ் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட பல உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் பயன்படுத்தும் எயார்பஸ் ஏ220 விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அண்மையில் Airbus A220-100 மற்றும் A220-300 விமானங்களுக்கு இரண்டு முக்கியமான பாதுகாப்பு (Airworthiness) உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இதில் Air Baltic, Swiss உள்ளிட்ட ஏர்லைன்கள் பாதிக்கப்படலாம் என Aerotelegraph தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதி முதல் அமலுக்கு வந்த முதல் உத்தரவு, விமானத்தின் முக்கியமான உடல் கட்டமைப்புகளில் தவறான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதை குறிக்கிறது.

விமானத்தின் சில பகுதிகளில் நிக்கல் பொருட்கள் Nickel Alloy பயன்படுத்தப்பட வேண்டிய சில இடங்களில் டைடானியம் Titanium பொருட்கள் பிழையாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இது விமானக் கட்டமைப்பின் வலிமையை குறைத்து, விமானத்தில் சேதம் ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்குகிறது.

மேலும் எரிபொருள் கசியும் அபாயமும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

500 விமானப் பயணங்களுக்கு பின்னர் (அல்லது அதிகபட்சம் 10,000 பயணங்களுக்குள்) விமானம் முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும். Titanium பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக Airbus-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மேலும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை Airbus அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதி முதல் அமலுக்கு வரும் இரண்டாவது பாதுகாப்பு உத்தரவு, விமானத்தின் பயணக் கைப்பொதிகள் களஞ்சிப் பகுதி (Hand Luggage Compartments) பாதுகாப்பாக இல்லை என்பதைக் குறிக்கிறது.

இந்தக் களஞ்சியப் பகுதி உரிய பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை என உரிய தர பரிசோதனையில் (Quality Inspection) கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், அவசர தரையிறக்கத்தின்போது கைப்பை பயணப்பொதி பெட்டிகள் அவ்வளவாக இருக்காமல் பயணிகளை காயப்படுத்தும் அபாயம் உள்ளது.

இதை சரிசெய்ய, நீண்டகால திருத்தம் 48 மாதங்களுக்குள் (4 ஆண்டுகளுக்குள்) மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், புதிய பகுதிகளை மாற்றி நிறுவ தேவையில்லை என Airbus தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு உத்தரவுகளால் Delta Air Lines, Air Baltic, Swiss, Korean Air, Air Tanzania, Breeze Airways, Cyprus Airways, Egypt Air, JetBlue, Air Austral, Air France, Iraqi Airways, ITA Airways உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானங்களை பரிசோதித்து திருத்தம் செய்ய வேண்டும்.

புதிய உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தயாராகி வருவதாக சுவிஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்கள் விமானங்களுக்கு தேவையான பரிசோதனைகளை சரியான இடைவெளிகளில் செய்து வருகிறோம். விமானங்களின் தரையிறங்கும் நேரங்களை பயனுள்ளதாக பயன்படுத்தி, இவ்வாய்வுகளையும் விரைவாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று Swiss விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பாதுகாப்பு மாற்றங்கள், விமானப் பயணிகள் பாதுகாப்புக்கு மிக முக்கியமானவை என்பதால், அனைத்து விமான நிறுவனங்களும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES