ஜெனீவா தேசிய சபை உறுப்பினர் டேனியல் சொர்மானி பணக்கார கைதிகள் தங்கள் சிறைச்சாலை செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டு வருமானம் 1,50,000 ஸ்விஸ் பிராங்கிற்கு மேற்பட்ட கைதிகள் தங்கள் சிறைச்சாலை செலவுகளை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவர்களின் மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியமும் அவர்களே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பொதுமக்கள் வழங்கும் வரிப்பணத்தின் செலவுகளை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசாங்கம் இதன் நடைமுறைத்தன்மையை ஆய்வு செய்து கணக்கீடுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒரு கைதிக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 300 முதல் 400 ஸ்விஸ் பிராங்கு செலவிடுகிறது. இதுவே மாதம் 10,000 ஸ்விஸ் பிராங்கிற்கும் அதிகமாகிறது. இந்த செலவினம் பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிதிச்சுமையை குறைக்கவே, ஸ்விஸ் மக்கள் கட்சி (SVP) நாடாளுமன்றக் குழுவில் இருக்கும் சொர்மானி, அதிக வருமானம் உள்ள கைதிகள் தங்களின் சிறைச்சாலை செலவுகளையும் மருத்துவச் செலவுகளையும் ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
“தன்னார்வத்துடன் நேர்மையாக வாழும் பொதுமக்கள் தங்களுக்கே வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அதிக வருமானம் உள்ள கைதிகள் முழுமையாக அரசின் நிதியுதவியைப் பெறுவது நியாயமற்றது,” என அவர் கூறியுள்ளார்.