மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் விளைவாக கட்டிடங்கள் இடிந்தன, பாதைகள் சேதமடைந்தன, மேலும் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குறைந்தது 144 பேர் உயிரிழந்துள்ளதுடன், 732 பேர் காயமடைந்துள்ளனர் என மியான்மர் அரசின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதுடன், பாங்காக்கில் (Bangkok) குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மர் இராணுவ அரசு, நெய்பிதா (Naypyidaw) மற்றும் மண்டாலே (Mandalay) உட்பட 6 மாநிலங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளது.
, மண்டாலே, சாகைங் (Sagaing) மற்றும் நெய்பிதாவில் மருத்துவமனைகளில் இரத்தத் தேவையை ஈடு செய்ய முடியவில்லை என மியான்மர் அரசு பேச்சாளர் மேஜர் ஜெனரல் சா மின் துண் (Major General Zaw Min Tun) தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.50 மணிக்கு (06:20 GMT) மியான்மரின் பழைய தலைநகரான மண்டாலேயின் அருகே 7.7 அளவிலான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு சில நிமிடங்களில் 6.4 அளவிலான பின் அதிர்வு (aftershock) ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவல் வெளியிட்டுள்ளது.
மியான்மரின் நவீன தலைநகரான நெய்பிதாவில் அரசு ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மியான்மர் இராணுவ நிர்வாக தலைவர், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில், சாடுசாக் (Chatuchak) சந்தையின் அருகே 33 மாடி கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.
இந்த கட்டிடம் இடிந்து விழும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.