ஈரான் தனது அணு ஆயுத திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் உடன்படிக்கைக்கு வராவிட்டால், பயங்கர தாக்குதல்கள் மற்றும் பொருளாதார தடைகள் அமல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் ஒப்பந்தம் செய்யாவிட்டால், குண்டுவீசப்படும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அணு ஆயுத திட்டம் குறித்த எந்த பேச்சுவார்த்தைகளையும் தாம் நிராகரிப்பதாக ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது, ஈரான் ஆன்மீகத் தலைவருக்கு டிரம்ப் எழுதிய கடிதத்துக்கு வழங்கிய முதல் பதிலாக காணப்படுகின்றது.
மேலும், டிரம்ப் எடுத்த முடிவுகளை மீண்டும் செயல்படுத்துவதை பற்றியும் சுட்டிக்காட்டினார். “அவர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், நான்கு ஆண்டுகளுக்கு முன் செய்ததைப் போலவே இரண்டாம் நிலை பொருளாதார தடைகளை விதிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது,” டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது முதலாவது ஆட்சி காலத்தில், 2015 ஆம் ஆண்டு உலக நாட்டு தலைவர்கள் மற்றும் ஈரானுக்கு இடையில் ஏற்பட்ட அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார்.
அந்த ஒப்பந்தம், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக இருந்தது, அதற்கு பதிலாக பொருளாதார தளர்வுகள் வழங்கப்பட்டன.