சிங்கள மற்றும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மானிய விலையில் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் அரசாங்கத்தின் முடிவை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த சலுகை விலையிலான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி, இந்த உணவுப் பொதிகள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்துள்ள 12,753,000 விண்ணப்பதாரர்களில் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ.5000 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரூ.2500 சலுகை விலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த சலுகை விலை உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிக்கு கடந்த நாட்களில் அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
லங்கா சதொச மற்றும் கோ-ஆப் அங்காடிகள் மூலம் ஏப்ரல் 1ம் திகதி முதல் 13ஆம் திகதி வரை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது.