9 C
Switzerland
Wednesday, May 21, 2025

உலகப் பொருளாதாரம் பாரிய அபாயத்தில் – சிங்கப்பூர் பிரதமர்

Must Read

உலகப் பொருளாதாரம் பாரிய அபாயத்தினை எதிர்நோக்குவதாக சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வொங் எச்சரிக்க விடுத்துள்ளார்.

சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட சிங்கப்பூர் போன்ற நாடுகள் அமெரிக்க வரி விதிப்பினால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விடுதலை நாள் பிரகடனம் மற்றும் நாடுகள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையிலான சுங்க வரி விதிப்பு ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தை பெரும் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உலக நியதிகளை, உலகின் பொது அமைப்புக்களை உதாசீனம் செய்து, எதேச்சாதிகார போக்கில் தீர்மானங்களை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த சுயநலவாத போக்கு உலக நாடுகளின் பொருளாதாரங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியதிகளின் அடிப்படையிலான உலகமயமாக்கல் மற்றும் சுதந்திர வர்த்தகம் ஆகிய விடயங்களுக்கு இனி இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது உலக நாடுகளின் பொருளாதாரம் சுயநலவாத, ஆபத்தான பாதையில் பயணிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் சுதந்திர வர்த்தகத்தையும் பன்னாட்டு பொருளாதாரத்தையும் மேம்படுத்தி வந்த அமெரிக்கா இன்று தலைகீழான மாற்றங்களுடன் கடுமையான கொள்கைகளை அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார அமைப்பின் நடவடிக்கைகளினால் அனைத்து நாடுகளும் நன்மை அடைந்திருந்தன.

இந்த அமைப்பின் செயற்பாடுகள் உலக நாடுகளின் பொருளாதார சுபீட்சத்திற்கு வழியமைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார அமைப்பின் விதிகள் நியதிகள் என்பனவற்றில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கோரி வந்தன.

எனினும், அமெரிக்கா நியதிகளில் மாற்றம் செய்வதனை விடவும் ஒட்டுமொத்த முறையையும் கைவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு நாடு தனித் தனியான வரி அறவீட்டு முறையானது உலகப் பொருளாதார அமைப்பினை முழுமையாக நிராகரிக்கும் செயற்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா சிங்கப்பூர் மீது குறைந்தளவு வரிகளை விதித்துள்ளது.

எனினும் இந்த நிலைமை எதிர்காலத்தில் மாற்றமடையக் கூடிய சாத்தியங்கள் உண்டு என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை போன்றே ஏனைய நாடுகளும் சுயநலவாத அடிப்படையில் விருப்பத் தெரிவின் பிரகாரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இந்த அணுகுமுறையினால் பெரும் தாக்கத்தை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் போன்ற நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் ஓரங்கட்டப்படக்கூடிய பாரிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக சிங்கப்பூர் பதிலடி நடவடிக்கைகளை எடுக்காது என தெரிவித்துள்ளார்.

வர்த்தகத்தை அதிகளவு நம்பியிருக்கும் சிங்கப்பூருக்கு அமெரிக்க வரி விதிப்பு பெரும் சவால்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான நாடுகள் சுயநலவாத அடிப்படையில் அழுத்தங்களை பிரயோகித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முனைப்பு காட்டும் எனவும் இது ஓர் கசப்பான உண்மை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் கடுமையான அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தில் நிலவிய அமைதி நிலை மீண்டும் திரும்பக்கூடிய சாத்தியங்கள் குறைவு என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மனதளவில் இந்த அழுத்தங்களை எதிர்நோக்க ஆயத்தமாக வேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களை பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஒற்றுமையுடன் செயற்பட்டால் இந்த பிரச்சினைக்குரிய உலகில் சவால்களை வென்றெடுக்க முடியும் என்பதே தமது நம்பிக்கை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES