அமெரிக்கா விதித்த 34% சுங்க வரி தொடர்பில் சீனாவின் பதிலடி நடவடிக்கைகள் திரும்பப் பெறாதால், அதற்கேற்ப 50% கூடுதல் சுங்க வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் உலக சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த வாரம் தனது “விடுதலை நாள்” (Liberation Day) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34% சுங்க வரியை அறிவித்தார்.
இதற்கு பதிலாக பீஜிங் திங்களன்று எதிர்வினை அளித்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை Truth Social தளத்தில் பதிவிட்ட டிரம்ப், சீனா திங்கட்கிழமைக்குள் அதன் எதிர்வினையை (counter-tariff) திரும்பப்பெறாவிட்டால் 50% சுங்க வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
அமெரிக்காவின் “அடக்குமுறை” முறையை ஒருபோதும் ஏற்க முடியாது என சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
டிரம்ப் தனது மிரட்டலை நடைமுறைப்படுத்தினால், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட 20% சுங்க வரி மற்றும் தற்போது உள்ள 34% சுங்க வரியுடன் சேர்ந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 104% வரை சுங்க வரி அமெரிக்க நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படலாம்.
இது உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போரை இன்னும் தீவிரமாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சுங்க வரி விவகாரம் காரணமாக உலக பங்கு சந்தைகள் மோசமான வீழ்ச்சியை சந்தித்தன.
ஹாங்காங் பங்கு குறியீடு 13% வீழ்ந்தது – இது 1997க்குப் பிந்தைய மிகப்பெரிய ஒரே நாள் வீழ்ச்சி. லண்டனின் FTSE 100 உள்ளிட்ட ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளும் 4% க்கும் மேல் குறைந்தன. அமெரிக்க பங்குச் சந்தையும் துவக்கத்தில் வீழ்ந்த நிலையில் பின்னர் ஓரளவுக்கு மீண்டது.
“சீனாவுடன் நடைபெறும் அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்படும்,” என டிரம்ப், எச்சரித்ததுடன், “ஏனைய நாடுகளுடனான சுங்க பேச்சுவார்த்தைகளுக்காக சுங்க வரிகளை இடைநிறுத்தும் எண்ணம் இல்லை” எனக் கூறினார்.
“அமெரிக்காவிற்கு எதிராக எந்த நாடும் பதிலடி நடவடிக்கைகளை எடுப்பதை நான் எச்சரித்திருந்தேன். அவர்கள் அதனை புறக்கணித்தனர். எனவே, மிகப்பெரிய அளவில் புதிய சுங்க வரிகள் அமையும்,” என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, பன்னாட்டு விதிமுறைகளை மீறி, ஒருதலைப்பட்சமான, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மிரட்டலை பயன்படுத்துகிறது. இது சரியான அணுகுமுறை அல்ல,” என அமெரிக்காவிற்கான சீன தூதரக பேச்சாளர் லியூ பெங்க்யு, தெரிவித்துள்ளார்.