அமெரிக்காவுடன் நிலவும் வர்த்தகப் போரின் பின்னணியில்,சுவிட்சர்லாந்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் வகையில் சிறப்பு தூதுவரை நியமிக்கத் தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் மத்திய அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
தற்போது வெளிவிவகார அமைச்சின் பன்னாட்டு பாதுகாப்புப் பிரிவின் தலைவராக பணியாற்றி வரும் கப்ரியல் லூசிங்கர் இந்த புதிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்த சிறப்பு தூதுவரின் பதவி தற்காலிகமானதொரு பதவியாகும். இதன் மூலம் சுவிட்சர்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முக்கியமான விடயங்கள் குறிப்பாக வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் நிதி துறைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு பாதுகாப்பு தொடர்பான விவாதங்களிலும் இந்த பிரதிநிதி முக்கிய பங்கு வகிக்கவிருக்கிறார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் தலைமையில் அமெரிக்காவுடன் உறவுகளை ஒருங்கிணைக்கும் சிறப்பு திட்டக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அனைத்து அரசுத்துறை பிரிவுகளும் பங்காற்றவிருக்கின்றன.
இந்த திட்டம் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.