2025ஆம் ஆண்டு உலகளாவிய பொருட்கள் வர்த்தகம் 0.2% முதல் 1.5% வரை குறையக்கூடும் என உலக வர்த்தக அமைப்பு (WTO) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த குறைவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி (Tariff) கொள்கையின் முன்னேற்றம் எப்படி அமையும் என்பதையே சார்ந்திருக்கும் என உலக வர்த்தக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
“வர்த்தகக் கொள்கைகளை சுற்றி நிலவும் குழப்பம், உலகம் முழுவதும் மிகப் பெரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய கணிப்புகள் படி, 2025ஆம் ஆண்டில் உலக பொருட்கள் வர்த்தகம் 0.2% குறைய வாய்ப்பு இருப்பதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், டிரம்பின் வரி திட்டங்களில் இருந்து உருவாகும் “கடுமையான எதிர்மறை சூழல்” காரணமாக, இந்த குறைவு 1.5% வரை அதிகமாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் தனது வர்த்தக கொள்கையின் கீழ், ஆலுமினியம், ஸ்டீல் மற்றும் கார்கள் உள்ளிட்ட இறக்குமதிகளுக்கு கூடுதல் வரி விதித்து உள்ளார்.
மேலும் கனடா மற்றும் மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் பரவலான வரிகளை திணித்துள்ளார்.
இதன்மூலம் அனைத்து வர்த்தகக் கூட்டாளிகளுக்கும் 10 சதவீதம் வரி விதிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சில நாடுகளுக்கான கூடுதல் வரிகள் (50% வரை அதிகரிக்கக் கூடியவை) தற்போது 90 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் புதிய இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.