அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறி ஒருவருக்கு உதவியதாக குற்றம் சுமத்தி அந்நாட்டு நீதிபதி ஒருவரை, மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த மில்வாக்கி கவுண்டி சர்க்யூட் நீதிபதி ஹன்னா டூகன் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குடியுரிமை மற்றும் குடியேற்ற விசாரணை அதிகாரிகள் சட்டவிரோத குடியேறி ஒருவரை கைது செய்ய முயற்சித்த போது அதற்கு நீதிபதி டூகான் இடையூறு விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் காஷ் படேல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நீதிபதி டூகன், வெள்ளிக்கிழமை காலை பெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.
விசாரணைக்காக நீதிமன்றம் வந்திருந்த எடுவர்டோ ஃப்ளோரஸ் ரூயிஸ் என்ற சட்டவிரோத குடியேறியை கைது செய்ய வந்த கூட்டாட்சி அதிகாரிகளை திட்டமிட்டு தவறான திசையில் அனுப்பி வைத்து, அவர் கைது செய்யப்படாமல் தப்பிக்க உதவியதாக நீதிபதி டூகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“நாங்கள் நம்புவது என்னவென்றால், நீதிபதி டூகன் எடுவர்டோ ஃப்ளோரஸ் ரூயிஸை கைது செய்ய வந்த அதிகாரிகளை முற்றிலும் மாறுபட்ட திசைக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் ஒரு சட்டவிரோத குடியேற்றக்காரர். அதற்கேற்ப அதிகாரிகள் அவரை ஓடிச் சென்று பிடித்து கைது செய்தனர்,” என படேல் பதிவிட்டுள்ளார்.