இலங்கையும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை இறுதிப்படுத்தும் நோக்கில், மாறுபட்ட வரி சலுகைகள் (Reciprocal Tariff) தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஒப்புக்கொண்டுள்ளன.
இது தொடர்பான தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் திகதி, வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகத்தில், இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவும் அமெரிக்க வர்த்தகத் தூதர் ஜேமிசன் கிரியரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சராக உள்ள அனுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அதிகாரபூர்வ கடிதங்கள் தூதரிடம் கையளிக்கப்பட்டன.
இந்த சந்திப்பில், இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் தூதருக்கு விளக்கப்பட்டது.
தூதர் கிரியர், இலங்கையின் நேர்மையான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாராட்டை தெரிவித்ததுடன், விரைவில் நியாயமான, சமமான வர்த்தக உறவுகளுக்கான உடன்படிக்கை கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதே நாளில், தூதர் கிரியரால் நியமிக்கப்பட்ட அமெரிக்க வர்த்தகத் தரப்பினர் குழுவையும் இலங்கை குழு சந்தித்தது. இதில் தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வர்த்தக தூதர் பிரெண்டன் லிஞ்சும், தெற்காசியப் பிரிவுத் இயக்குநர் எமிலி ஆஷ்பியும் கலந்து கொண்டனர்.
இவ்விரு தரப்பினரும் உடன்படிக்கையை எதிர்வரும் மிகக் குறுகிய காலத்திற்குள் முடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
USTR (U.S. Trade Representative) அலுவலகம் என்பது அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகம், நேரடி முதலீடு மற்றும் பொருட் கொள்கைகளை உருவாக்கி ஒழுங்குபடுத்தும் பொறுப்புடைய முக்கிய நிறுவனமாகும்.
இது ஒரு முக்கிய முன்னேற்றமாக காணப்படுகின்றது, ஏனெனில் இலங்கைக்கு புதிய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கான முக்கிய அடித்தளமாக அமையலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.