பௌத்த மக்களின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக ஸ்ரீ தலதா மாளிகை கருதப்படுகின்றது.
கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகையில் புத்தப்பிரானின் புனித தந்த தாது அல்லது புத்தரின் பல் அடங்கிய புனித பேழை காணப்படுவதாக காணப்படுகின்றது.
இந்த புனித பேழையை தரிசிப்பதற்கு எல்லா சந்தர்ப்பத்திலும் பொது மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கடந்த 16 ஆண்டுகளில் இந்த புனித பொருட்கள் நிர்வாகம் சந்தர்ப்பம் வழங்கவில்லை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்க ஆட்சிக் காலத்தில் இந்த புனித பொருட்களை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கையின் எட்டு திக்கையும் சேர்ந்த பௌத்த வழிபாட்டாளர்கள் திரளாக கூடி, இந்த புனித பொருட்களை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
இவ்வாறு நீண்ட வரிசைகளில் காத்திருந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 300க்கு மேற்பட்டவர்கள் நோய்வாய் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தலதா மாளிகை புனித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட நேரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசாங்கம் அரசியல் நோக்கில் தலதா மாளிகை புனித தந்த தாதுவை காட்சிப்படுத்தி வயோதிப வாக்காளர்களின் மீது செல்வாக்கு செலுத்த முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று வரும் இந்த வழிபாட்டு நிகழ்வில் அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடி இருக்கும் கண்டி நகரில் போதியளவு போக்குவரத்து சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சுமார் 4 லட்சம் மக்கள் தற்பொழுது வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்ற வேண்டாம் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மித மிஞ்சிய அளவில் மக்கள் கண்டி நகரில் குழுமியுள்ளதாகவும் இதனால் பெரும் அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே மறு அறிவித்தல் வரையில் வழிபாட்டு நோக்கங்களுக்காக கண்டி நகருக்குள் பிரவேசிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புனித தந்த தாது காட்சிப்படுத்தும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதாக கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே நிரஞ்சன் தேல அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் இந்த வழிபாட்டு நிகழ்வுகள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
மன்னர் ஆட்சி காலம் முதல் தலதா மாளிகையில் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளுக்கு அமைய குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தலதா மாளிகையின் வாயிற் கதவுகள் திறக்கப்படுகிறது பின்னர் மூடப்பட்டு பூஜை வழிபாடுகள் நடத்தப்படும்.
அந்த வகையில் தலதா மாளிகையில் மேற்கொள்ளப்படும் இந்த வழிபாட்டு நிகழ்வுகள் மக்களை பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, மதங்களுக்கு சம உரிமை வழங்குவதாக ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த மதத்தினை முன்னிலைப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.