ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினும் போர்ச்சுகலும், மோசமான மற்றும் காரணமறியாத மின் தடையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் போக்குவரத்து விளக்குகள் செயலிழந்ததால் சாலைகளிலும் விமான நிலையங்களிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
பிற்பகல் வேளையில் ஐபீரிய தீவுப்பகுதி முழுவதும் மற்றும் பிரான்சின் சில பகுதிகளிலும் மின் வழங்கல் முற்றாக பாதிக்கப்பட்டதாக போர்ச்சுகலின் மின் ஒழுங்குபடுத்தும் நிறுவனமான Redes Energéticas Nacionais (REN) தெரிவித்துள்ளது.
பல மணி நேரங்களுக்குப் பிறகு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ், மின் நின்றதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அறிவித்துள்ளார்.
இந்த மின் தடை, நகர சாலை போக்குவரத்தையும், மெட்ரோ ரயில்களையும் முற்றிலும் முடங்கச் செய்தது. மாட்ரிடில் போக்குவரத்து ஸ்தம்பிதம் காரணமாக வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இந்நிலையில், போக்குவரத்து மையங்கள் மூடப்பட்டு, இரண்டு நாடுகளும் அவசரக் கூட்டங்களை நடத்தி ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டன.
மாட்ரிடின் மெட்ரோ நிலையங்கள் இருண்டன. பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் ஆன்டலுசியா, எக்ஸ்டிரெமடுரா, முர்சியா, லா ரியோஜா மற்றும் மாட்ரிட் பகுதிகளில் அவசரநிலையை அறிவித்தது.
மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் இது சிக்கலான செயன்முறை எனவும் போர்ச்சுகலின் பிரதமர் லூயிஸ் மொண்டெனெக்ரோ தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில், இரு நாடுகளிலும் மின்விநியோகம் மெதுவாக மீட்கப்படத் தொடங்கியது. ஸ்பெயினின் சுற்றுச்சூழல் அமைச்சர் சாரா ஆகேசன் தெரிவித்தார்.
முன்னதாக, மாட்ரிட் மேயர் ஜோசே லூயிஸ் மார்டினெஸ் ஆல்மெய்டா மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், அவசர சேவைகளை மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
இந்த மின் தடைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது இணையதள தாக்குதல் (Cyber Attack) காரணமாக ஏற்படவில்லை என போர்ச்சுகலின் முன்னாள் பிரதமரும் தற்போதைய ஐரோப்பிய கவுன்சில் தலைவருமான ஆண்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் தனது மின் தேவையின் பெரும்பகுதியை ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக, REN தலைவர் ஜோவோ பாரியா கொன்செய்சாஓ விளக்கினார்.