இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமாகியுள்ளது.
“அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கும் என நம்பகமான உளவுத் தகவல் உள்ளது” என பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தாவுல்லா தரர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டும் இருதரப்புகளையும் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
அத்தாவுல்லா தரர் இந்த தகவலை சமூக ஊடகமான “X” வில் பகிர்ந்தார். ஆனால், பாகிஸ்தான் இதற்கு ஆதாரமாக என்ன தகவல்களை வைத்துள்ளது என்பதைக் குறித்து அவர் விளக்கவில்லை.
இந்த குற்றச்சாட்டுகள், கடந்த வாரம் இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் பஹல்காம் நகரத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பின்னர் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இதை பாகிஸ்தான் மறுக்கிறது மற்றும் நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கான பதிலை இன்னும் வெளியிடவில்லை.
காஷ்மீர் பிரச்சனை உலகின் மிக ஆபத்தான சரஹத்துப் பகுதிகளில் ஒன்றாகும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் முழுமையான உரிமை கோரிவரும் இந்த மலைப்பகுதி தற்போது “லைன் ஆஃப் கண்ட்ரோல்” எனப்படும் கோடு வழியாக பிரிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் இதுவரை இந்தப் பகுதிக்காகமூன்று போர்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடுமையான பதிலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
“தாக்குதலாளர்களை பூமியின் கடைசி முனையில்வரை துரத்துவோம்” என மோடி அண்மையில் கூறியிருந்தார்.
2019-இல் இந்தியாவின் CRPF வீரர்கள் மீது காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலாக இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது.
இது 1971 பாகிஸ்தான்-இந்தியா போருக்குப் பின் நடந்த முதல் பெரிய இராணுவ நடவடிக்கையாகும். இதே போன்று இப்போது இந்தியா பதிலடி கொடுக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
“இந்தியாவின் எந்தவொரு இராணுவ அதிரடிக்கும் பாகிஸ்தான் உறுதியாகவும், கடுமையாகவும் பதிலளிக்கும்” என பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரர் மேலும் கூறியுள்ளார்.