சுவிட்சர்லாந்து அரசு, பாலஸ்தீன ஆயுத அமைப்பான ஹமாஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை தடைசெய்யும் புதிய சட்டத்தை மே 15ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
சட்டத்திற்குரிய ஒப்புதல் கடந்த ஆண்டு டிசம்பரில் சுவிஸ் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டது.
இது, 2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பின்னராக எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
“இந்த புதிய சட்டம், ஹமாஸ் அமைப்பின் நடவடிக்கைகள் அல்லது அதற்கு ஆதரவாக செயல்படுவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க தேவையான அதிகாரங்களை சுவிஸ் அதிகாரிகளுக்கு வழங்குகிறது,” என சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தடை சட்டத்தின் மூலம் சுவிட்சர்லாந்தை ஒரு பாதுகாப்பான தங்குமிடமாக ஹமாஸ் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கம் உள்ளதாகவும், அமைப்பினர் மீது நுழைவுத் தடை அல்லது நாடு கடத்தும் நடவடிக்கைகள் எளிதாக மேற்கொள்ளப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.