தனியுரிமை பாதுகாப்பு விதிகளை மீறியதாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) இன்றைய தினம் TikTok நிறுவனத்திற்கு 530 மில்லியன் யூரோ (அமெரிக்க டொலர்களில் சுமார் $600 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது.
இந்த முடிவு நான்கு வருட விசாரணைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையில், TikTok நிறுவனம் அதன் பயனர் தரவுகளை சீனாவுக்கு அனுப்பியுள்ளமை, அத்துடன் சீன அதிகாரிகளால் கண்காணிக்கப்படக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளமை, EU சட்டங்களைப் பெரிதும் மீறியதாக கண்டறியப்பட்டது.
அயர்லாந்தின் தரவுக் கண்காணிப்பு ஆணையம் (Data Protection Commission), TikTok நிறுவனத்தின் தெளிவற்ற தரவுப் பரிமாற்றங்கள் மற்றும் பயனர்களிடம் உரிய விளக்கமின்றி செயல்பட்டமை ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும், TikTok ஆறு மாதங்களுக்குள் சட்டப்படி இணங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
TikTok நிறுவனத்தின் ஐரோப்பியத் தலைமையகம் டப்ளினில் (Dublin) உள்ளதால், அயர்லாந்து இந்த வழக்கின் பிரதான கண்காணிப்பாளராக செயல்பட்டது.
TikTok நிறுவனம், சீனாவிலுள்ள ஊழியர்களால் தொலைவிலிருந்து அணுகப்பட்டுள்ள பயனர் தகவல்களுக்கு, ஐரோப்பிய தரவுப் பாதுகாப்பு அளவிற்கு சமமான பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்யவோ, நிரூபிக்கவோ தவறியுள்ளது. என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, TikTok நிறுவனம் இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது என தெரிவித்ததுடன், மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த முடிவு 2023 மே மாதம் வரை இருந்த காலக்கட்டத்தை மட்டும் கொண்டு எடுத்தது. அதற்குப் பிறகு நிறுவனம் “Project Clover” எனும் தரவு உள்ளூர் மையமாதல் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் கீழ், ஐரோப்பாவில் மூன்று தரவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.