2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த பிரசார நடவடிக்கைகள் நேற்று (மே 3) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளன.
இதன் மூலம், தேர்தலுக்கான நிசப்த காலப்பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் மே 6ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த தேர்தலில் மொத்தமாக 339 உள்ளுராட்சி மன்றங்களுக்காக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 17,156,338 பேர் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரபூர்வ வாக்குச்சீட்டுகள் பெறாதவர்களும், பதிவு செய்யப்பட்டிருப்பின் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க அவர்கள் கூறுகையில் உறுதி செய்தார்.
வாக்களிக்க ஏற்கத்தக்க அடையாள ஆவணங்கள் குறித்து அவர் விளக்கியதாவது:
- தேசிய அடையாள அட்டை (பதிவு திணைக்களம் வழங்கியது)
- சரியான கடவுச்சீட்டு
- சரியான ஓட்டுநர் உரிமம்
- அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டை
- பதிவு/ஓட்டுநர்/கடவுச்சீட்டு திணைக்களங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய தற்காலிக ஆவணம்
மேலும், இந்த ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், தேர்தல் ஆணைக்குழு வழங்கும் தற்காலிக அடையாள அட்டையும் செல்லுபடியாகும்.
இதேவேளை, இந்த தேர்தலில் 75,589 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
நிசப்த காலப்பகுதியின் போது சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
இதற்கமைய, வேட்பாளர்களின் பிரசார அலுவலகங்கள், போஸ்டர்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்தல் கண்காணிக்க PAFFREL அமைப்பின் கீழ் சுமார் 3,000 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.