கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதியாக இணைக்கும் எண்ணத்தில், இராணுவத்தை பயன்படுத்தும் திட்டத்தையும் நிராகரிக்க முடியாது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
என்.பி.ஸீ அலைவரிசைக்கு அவர் அளித்த அண்மைய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது மீண்டும் சர்வதேச ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதனை தாம் நிராகரிக்கவில்லை,” எனவும் தாம் அதனை கட்டாயமாக செய்வதாகவும் சொல்லவில்லை எனவும் ஆனால் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து மிகவும் அவசியப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு ஒரு சிறிய மக்கள் தொகை தான் இருக்கிறார்கள்; அவர்களை நாங்கள் பாதுகாப்போம், நேசிப்போம். ஆனால் இந்த தீவு பன்னாட்டு பாதுகாப்புக்காக முக்கியமானது,” என அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள் வெளியாகிய பிறகு, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரெடெரிக் நீல்சன், கடந்த மார்ச்சில் வெளியிட்ட கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா கிரீன்லாந்தை பெற்று விடும் என டிரம்ப் கூறுகிறார். ஆனால் நாம் யாருடைய சொத்தும் அல்ல. எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்,” என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
அர்க்டிக் பகுதியில் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் தாக்குப்பிடிக்கும் சூழலில், கிரீன்லாந்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
முக்கிய கப்பல் பாதைகளுக்கு இடையே அமைந்திருக்கும் இந்த தீவு, ரஷியாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு புவியியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இதேவேளை, கிரீன்லாந்துடன் மட்டுமல்லாமல், டிரம்ப் கனடாவையும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக்க திட்டமிடுவதாக பல முறை கருத்து தெரிவித்துள்ளார். இது, அமெரிக்கா-கனடா இடையே ஏற்கனவே இருந்த நட்பு உறவை பதற்றமூட்டியுள்ளது.