இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த தேர்தலில் சிறிய பின்னடைவை சந்தித்துள்ளது.
பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களில் கூடுதல் ஆசன எண்ணிக்கையை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.
எனினும் ஆட்சி அமைப்பதில் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக முடிவுகள் வெளியான பல உள்ளுராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியிருந்தாலும் 50 வீத வாக்குகள் கூட பெற்றுக்கொள்ளவில்லை.
இதனால் தனியாக ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
ஆளும் கட்சியை விடவும் எதிர்க்கட்சிகள் கூடுதல் ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 44 வீத வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் சுமார் 55 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளன.
ஏற்கனவே நாம் எதிர்வு கூறியது போன்று இம்முறை தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி முன்னணி வகித்தாலும் வாக்கு வீதம் சரிவடைந்துள்ள நிலையை அவதானிக்க முடிகின்றது.
பொதுவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை ஒப்பீட்டால் ஏனைய தேசிய தேர்தல்களை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், இந்த அரசாங்கத்தின் மீதான மக்கள் அபிமானத்திலும் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதனை சில பகுதிகளில் வெளியான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இன்னமும் அதிக எண்ணிக்கையிலான உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.