சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் அடையாள அட்டையின் (e-ID) அறிமுகத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்காக போராடும் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வெற்றி என கருதப்படுகிறது.
அடையாள அட்டை மற்றும் மின்னணு ஆதாரங்களுக்கான சட்டத்தின் (2024 டிசம்பர் 20-ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட தேசிய சட்டம்) எதிராக 55,683 கையொப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அதில் 55,344 கையொப்பங்கள் செல்லுபடியானவை என சுவிஸ் மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இ-ஐடி சட்டத்துக்கு எதிரான மக்கள் வாக்கெடுப்பு நடத்தும் பாதைத் திறக்கப்பட்டுள்ளது.
இ-ஐடி திட்டத்திற்கு எதிராக “No e-ID” மக்கள் இயக்கக் குழு, இந்த முடிவை தனியுரிமைக்கான முக்கிய முன்னேற்றம் என வரவேற்றுள்ளது.
மேலும், Pirate Party தனியாகவே ஒரு அறிக்கையில் “இத்திட்டத்தை ஆரம்பத்திலிருந்து விமர்சித்தது நாங்கள் தான்” எனக் கூறி மக்களுக்கான வெற்றியை வரவேற்றுள்ளது. Mass-Voll எனும் மற்றொரு இயக்கமும் 15,000 கையொப்பங்களை தனியாக அளித்திருந்தது.
இதேவேளை, 2021-இல் அரசு கொண்டு வந்த முதற்கட்ட இ-ஐடி திட்டம், தனியுரிமை மற்றும் தனியார் நிறுவனங்களின் மேலாண்மை போன்ற காரணங்களால் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதேபோல், தற்போதைய புதிய திட்டமும் அதே பிழைகளை மீண்டும் செய்கிறது என எதிர்ப்பு குழு குற்றஞ்சாட்டியுள்ளது.