இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் எல்லை பகுதியில் இடம்பெற்ற மோதலில் 40 முதல் 50 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தான் முன்னதாக மற்ற ஊடகங்கள் வெளியிட்ட பின்னர், சர்வதேச ஊடகமொன்றுக்கு உத்தியோகபூர்வமாக உறுதி செய்துள்ளது.
நாங்கள் அவர்கள் (இந்திய) ராணுவ கூடங்களை எல்லை பகுதியில் துல்லியமாக தாக்கி அழித்தோம்” என பாகிஸ்தானின் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் கூறினார்.
பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மீது இந்தியா புதன்கிழமை மேற்கொண்ட கடுமையான தாக்குதலுக்குப் பதிலளிக்க பாகிஸ்தான் உறுதிமொழி எடுத்துள்ளது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு வட்டாரங்களின் தகவலின்படி, இந்திய விமானப்படையின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் பல ட்ரோன்கள் சுட்டுத் தகர்க்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு இதுவரை மறுக்கவோ அல்லது பதிலளிக்கவோ இல்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நிலைமைகள் தொடர்ந்து மோசமாகி வருகின்றன.
நேற்றைய தினம் இந்தியா மேற்கொண்ட “சிந்தூர் நடவடிக்கை” எனும் தாக்குதலில் பாகிஸ்தானில் குறைந்தது 31 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 24க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பதிலடி நடவடிக்கையாக இடம்பெற்றது.
இந்த தாக்குதல்களில் எந்தவிதப் பங்கு வகிக்கவில்லை என்றும், தங்களை குற்றம்சாட்டுவது நேர்மையற்றது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.