யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழுவின் பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் உயிரிழந்ததாக ஹூதிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் சிலர் தீவிரமாக காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அரசு செயல்பாடுகள் மற்றும் கடந்த ஆண்டு செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்யும் வாராந்திர பணிமனையில் அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஹூதி தலைவர் உரையாற்றுவதாக இருந்ததால், இது ஒரு முக்கிய சந்தர்ப்பமாக இஸ்ரேல் பயன்படுத்தியதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தாக்குதல் குறித்து உடனடி பதில் அளிக்காத இஸ்ரேல், அண்மையில் ஹூதி தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அதன் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சில நாட்களுக்கு முன், ஹூதிகள் புதிய வகை குண்டுத்துண்டுகள் கொண்ட ஏவுகணையை ஏவியதை அடுத்து இந்த நடவடிக்கை நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
“அமெரிக்க ஆதரவுடன் இருக்கும் சயோனிச எதிரிக்கு எதிராக எங்களால் அனைத்து நிலைகளிலும் போராடத் தயாராக உள்ளோம்” என ஹூதி பாதுகாப்பு அமைச்சர் மஜ். ஜென். முகமது நாசர் அல்-அதிஃபி,தொலைக்காட்சி வாயிலாக எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காசா போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் தனது உளவுத்துறை வலிமையை பயன்படுத்தி ஈரானின் பிரதான நட்புதரப்புக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா (டெஹ்ரான்), ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா (பேரூத்), ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் (காசா) ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இப்போது ஹூதி பிரதமர் கொல்லப்பட்டிருப்பது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

