ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிரவைத்தது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த அதிர்வில், தொடக்க அறிக்கைகள் படி குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் ஏற்பட்ட அதிர்வால் பல கிராமங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்க மையம் நங்கர்ஹாரின் ஜலாலாபாத் நகரத்திற்கு கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில மணி நேரத்திலேயே நங்கர்ஹாரின் பசவுல் அருகே மேலும் ஒரு 4.5 ரிக்டர் நிலநடுக்கமும் பதிவானது.
பாகிஸ்தானின் கைய்பர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“குனாரில் பல கிராமங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன, மக்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளனர், மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன,” என தெரிவிக்கப்படுகின்றது.
மண் மற்றும் கற்களால் கட்டப்பட்ட வீடுகள் அதிகாலை நேர அதிர்வை தாங்க முடியாமல் இடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வாளர்கள், இந்த பகுதி இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் சந்திக்கும் நில அதிர்வுப் பகுதியில் உள்ளதால் தொடர்ந்து நிலநடுக்க ஆபத்து நிலவுவதாக எச்சரித்துள்ளனர்.
நிலநடுக்கங்களால் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயமும் அதிகம் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

