ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர்லேயன் பயணம் செய்த விமானத்தை ரஷ்யா இலக்கு வைத்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
உர்சுலா பயணித்த விமானம் பல்கேரியாவில் தரையிறங்கும் வேளையில் GPS வழிசெலுத்தல் சிக்னல் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக பல்கேரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் துணை பேச்சாளர் ஆரியானா போடெஸ்டா தெரிவித்துள்ளார்.
பைலட்டுகள் காகித வரைபடங்களை பயன்படுத்தி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினர்.
இந்த சம்பவம் பல்கேரியாவின் புளோவ்டிவ் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
உர்சுலா வான் டெர்லேயன், உக்ரைனுக்கான வலுவான ஆதரவினை வெளிப்படுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடத்திய உக்ரைன் உச்சிமாநாட்டிலும் பங்கேற்றிருந்தார்.
இந்த சம்பவம் ரஷ்யாவின் கலப்புப் போர் (Hybrid War) முறைமையின் ஓர் யுக்தியாக இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் பால்டிக் நாடுகள் பலமுறை GPS சமிக்ஞை குறுக்கீடுகளுக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு முன்னரும் ரஷ்யாவுடன் தொடர்புடைய பல அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

