இஸ்ரேலின் அரசியல் தலைமைக்கும் இராணுவத் தலைமைக்கும் இடையில் கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா போரினை விரிவுபடுத்தும் திட்டத்தைப் பற்றிய பாதுகாப்புக் கூட்டத்தில், இராணுவத் தளபதி ஐயால் சாமிர் நேரடியாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சவால் விட்டதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இரண்டாண்டுகள் நீடித்த போருக்குப் பிறகு காசா நகரை முற்றிலும் கைப்பற்றும் நடவடிக்கைக்கு அரசு தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த நடவடிக்கையானது 48 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், படைவீரர்கள் பலி ஆகலாம், மேலும் ஒரு மில்லியன் பாலஸ்தீனர்கள் இடம்பெயர நேரிடலாம் என சாமிர் எச்சரித்துள்ளார்.
அண்மைய பாதுகாப்புக் கூட்டத்தில், எகிப்து மற்றும் கத்தார் நடத்திய சமாதான முயற்சியை ஏற்க வேண்டும் என்று சாமிர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் நெதன்யாகு அதனை விவாதிக்க கூட மறுத்து, “பகுதி உடன்படிக்கை வேண்டாம்; முழு பலத்துடன் சென்று போரை முடிக்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
காசா நகரை கைப்பற்றும் நடவடிக்கை, இஸ்ரேல் முழுமையாக காசா பகுதியை இராணுவ நிர்வாகத்தில் எடுக்கும் நிலைக்குத் தள்ளும் என சாமிர் எச்சரித்துள்ளார்.
இராணுவத் தலைவரின் நிலைப்பாட்டை நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டாளிகள் “பலவீனமானது, தோல்வியுணர்வுடையது” என குற்றம்சாட்டினர்.
மேலும், ஆகஸ்ட் மாதம் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு சமூக ஊடகத்தில், “சாமிர் இராணுவப் புரட்சி நடத்த முயல்கிறார் என விமர்சித்துள்ளார்.

