முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது வசித்து வரும் அதிகாரப்பூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு விஜயராம வீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ளது.
இந்த இல்லத்தை குறற்ப் புலனாய்வு திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக எதிர்காலத்தில் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் அண்மையில் இடம் பெற்ற சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் வரப்பிரசாதங்கள் என்பனவற்றை ரத்து செய்யும் புதிய சட்ட மூலம் குறித்த வரைவு அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இந்த சட்டமூலத்தை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் தவிர்ந்த அதிகார பூர்வ இல்லங்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து வரப்பிரசாதங்களும் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு உரிமைகள் நீக்குவது குறித்த உத்தேச வரைவுச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜயராம வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை இதற்கு முன்னர் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தியதுடன் அதற்கு முன்னர் சில அமைச்சர்கள் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மஹிந்தவின் இல்லத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் இதுவரையில் வெளியிடவில்லை.

