எல்லா–வெல்லவாயை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பேருந்து சாரதி மற்றும் ஒன்பது பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து 23 மற்றும் 24 மைல்கற்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றது.
தங்காலை நகரசபை ஊழியர்கள் சுமார் 30 பேர் கொண்ட குழு, சுற்றுலா பயணமாக எல்லாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் பயணித்த பேருந்து எதிரே வந்த ஜீப்புடன் மோதியதுடன், வீதி பாதுகாப்பு வேலியையும் இடித்துச் சென்றது.
பின்னர் பேருந்து ஆயிரம் அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 30 பேர் பயணம் செய்திருந்தனர். இதில் ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து சிறுவர் உள்பட 18 பேர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் மிகக் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மீட்பு பணிகளில் ஈடுபட்ட இரண்டு பொதுமக்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குப் பின்னர் அவசர மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

