நீரிழிவு நோய்ப் பாதிப்பினை தடுக்கும் நோக்கில் நம்மில் பலர் செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துகின்றோம், எனினும் இவ்வாறு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பிரேசிலில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வொன்றில், தினசரி சிறிய அளவு டயட் சோடா குடிப்பதற்கு சமமான அளவு செயற்கை இனிப்புப் பொருட்களை (Artificial Sweeteners) உட்கொள்ளும் நபர்கள், நினைவாற்றலிலும் மற்றும் சொற்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனில் வேகமான வீழ்ச்சி ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
சாவோ பாலோ பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதியோர் நல நிபுணர் டாக்டர் குளோடியா கிமி சுயமோட்டோ தலைமையிலான குழுவொன்று இந்த ஆய்வினைமேற்கொண்டுள்ளனர்.
அதிக அளவில் இனிப்புப் பொருட்கள் எடுத்தவர்கள், குறைந்த அளவில் எடுத்தவர்களை விட 62% வேகமாக அறிவாற்றல் சிதைவுக்குள்ளாகினர்.
இது மூளை வயது சுமார் 1.6 ஆண்டுகள் அதிகரித்தது போன்ற விளைவுகளை ஏற்படுத்தியது.
ஒரு டயட் சோடா (aspartame சேர்க்கப்பட்ட) 200–300 மில்லி கிராம் இனிப்புப் பொருள் கொண்டிருக்கிறது. ஆய்வில் அதிகபட்சமாக எடுத்தவர்கள் தினசரி சராசரியாக 191 மில்லி கிராம் (சுமார் ஒரு டீஸ்பூன்) இனிப்புப் பொருள் எடுத்திருந்தனர்.
நடுத்தர குழுவினர் 66 மில்லி கிராம் எடுத்தனர்; குறைந்த அளவில் எடுத்தவர்கள் தினசரி 20 மில்லி கிராம் மட்டுமே எடுத்திருந்தனர்.
நடுத்தர அளவில் எடுத்தவர்களுக்கும் அறிவாற்றல் சிதைவு 35% அதிகரித்தது.
60 வயதுக்கு குறைவானவர்களுக்கு, மொழித் திறன் மற்றும் நினைவாற்றலில் வேகமான வீழ்ச்சி காணப்பட்டது.
நீரிழிவு நோயாளிகள் (Diabetes) செயற்கை இனிப்புப் பொருட்களால் மூளைக்கேடும் நினைவழிவும் மேலும் அதிகரித்ததாக தெரியவந்தது.
இந்த ஆய்வில் அஸ்பார்மேட், சாசாரின், எக்சுல்பேம், எரித்திரியோல், எக்ஸிலிடோல் , சோர்பிடோல் மற்றும் டாகாடோஸ் போன்ற இனிப்புகள் பரிசோதிக்கப்பட்டன. டாகாடோஸ் தவிர மற்ற அனைத்தும் அறிவாற்றல் குறைவுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டன.
செயற்கை இனிப்புகள் பொதுவாக டயட் பானங்கள், சுயிங்கம், சாக்லேட், குறைந்த சர்க்கரை கொண்ட பேக்கரி பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
எஸ்பார்மேட் என்ற செயற்கை இனிப்பூட்டி “மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்” என உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்கனவே 2023 இல் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், சர்வதேச இனிப்புப் பொருட்கள் சங்கம் (ISA) இதற்கு எதிராக, இனிப்புப் பொருட்கள் பாதுகாப்பானவை என்றும், உடல் எடை மற்றும் நீரிழிவு மேலாண்மைக்காக அவை பயன்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆய்வு செயற்கை இனிப்புகள் உடனடியாக மூளை பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கவில்லை. ஆனால், இவை நீண்டகாலத்தில் மூளை ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டுகிறது.
எனவே இயற்கை மாற்றுகளான தேன், பனங்கற்கண்டு, மேபிள் சிரப், தேங்காய் சர்க்கரை போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

