ஜெருசலேம் புறநகர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் திங்கட்கிழமை (8) இரு பாலஸ்தீன துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த சில ஆண்டுகளில் நகரில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும் என்று இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் வாகனங்களின் டாஷ்போர்டு காமிராவில் பதிவான காட்சிகளில், துப்பாக்கிச் சூடு ஒலிக்கத் தொடங்கியவுடன் மக்கள் அச்சத்தில் ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மற்றொரு வீடியோவில் பஸ்ஸின் முன்புற கண்ணாடியும் ஜன்னல்களும் குண்டுகளால் சேதமடைந்துள்ளன.
50 வயது ஆண் ஒருவர், 50 வயது பெண் ஒருவர் மற்றும் 30-களில் உள்ள மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஆறு பேர் துப்பாக்கிக் காயங்களால் தீவிர நிலையில் உள்ளனர்.
பின்னர் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் ஆறாவது உயிரிழப்பையும் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேல் காவல்துறை தகவலின்படி, மேற்கு கரையிலிருந்து வந்த பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பல துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் கத்தி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு சம்பவ இடத்தில் பேசியபோது, தாக்குதலில் உதவியவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இஸ்ரேல் இராணுவம், காவல்துறையுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், மேற்கு கரையில் உள்ள ராமல்லா பகுதியிலும் இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, “தீவிரவாதத்தை தடுக்க” விசாரணைகள் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2023 நவம்பரில் ஜெருசலேம் பஸ் நிறுத்தத்தில் இரு பாலஸ்தீனர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியானது. அதேபோல், 2024 அக்டோபரில் தெல் அவீவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

