மித்தெனிய பகுதியில் பெருந்தொகை ரசாயன பொருட்கள் அண்மையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஐஸ் போதை பொருள் தயாரிப்பதற்காக இந்த ரசாயனங்கள் தருவிக்கப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ரசாயனங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வரும் சம்பத் பிரீத்தி விராஜ் மானம்பேரி என்ற சந்தேக நபர் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் நாரஹேன்பிட்டி பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த நபரை ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர், அங்குனுகொலபெலச பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்டார் என்பதுடன் இவர் ஓர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் காரியத்திலும் இந்த சந்தேக நபர் செயற்பட்டுள்ளார் எனவும் திடீரென இவர் செல்வந்தராக மாறியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் தற்பொழுது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டிலேயே போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கில் இரசாயனங்கள் தருவிக்கப்பட்டு உற்பத்திசாலைகளை அமைத்து ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யபப்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் தகவல்களின் அடிப்படையில் இந்த இரசாயங்கள் மீட்கப்பட்டிருந்தன.

