பிரான்ஸ் நாடாளுமன்றம் பிரதமர் பிரான்சுவா பய்ரூவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியது.
இதனால், நாடு புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
மொத்தம் 364 எம்.பிக்கள் பய்ரூவுக்கு எதிராகவும், 194 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். 280 வாக்குகள் போதுமான நிலையில், எதிர்ப்புகள் மிக அதிகமாக வந்ததால், அரசு கலைக்கப்பட்டது.
பிரான்ஸ் ஜனாதிபதி எமனுவல் மக்ரோன் அடுத்த சில நாட்களில் புதிய பிரதமரை நியமிக்கவுள்ளார் என்று எலிசே அரண்மனை அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், ஆயுதப் படைகள் அமைச்சர் சேபாஸ்டியன் லெகோர்னு மற்றும் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் முன்னணி வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.
பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ சேமிப்பு திட்டம், இரண்டு பொதுவிடுமுறைகளை ரத்து செய்தல் மற்றும் அரச செலவுகளை உறையவைத்தல் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் கொண்டது. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரான்ஸ் அரசுப் பத்திர வட்டி விகிதங்கள், ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் நாடுகளை விட அதிகரித்துள்ளது.
மேலும், பிரான்சின் கடன் தரச்சான்று குறைக்கப்படும் அபாயமும் உள்ளது.
பய்ரூவின் தோல்வி, கடந்த ஆண்டு மக்ரோன் எடுத்த திடீர் தேர்தல் முடிவின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. அந்தத் தேர்தலில் மக்ரோனின் கட்சி இடங்களை இழந்து, வலதுசாரியும் இடதுசாரியும் வலுவடைந்தனர். இதனால் நாடாளுமன்றம் பிளவுபட்டது.
புதிய பிரதமர் யாராயினும், எதிர்க்கட்சிகள் உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு உள்ளது.
இதனால் அரசியல் நிலைத்தன்மை எட்டப்படுவது கடினம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
“பய்ரூவுக்கு விடை கொடுக்கும் விருந்து” என்ற போராட்டம் கிளெர்மோன்-ஃபெரான்டில் நடைபெற்றது.
இடதுசாரிகள் இந்த புதன்கிழமை தேசிய அளவிலான போராட்டங்களை அறிவித்துள்ளனர். தொழிற்சங்கங்களும் செப்டம்பர் 18 அன்று மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளன.
உக்ரைன், மத்திய கிழக்கு போர்கள் தொடர்ந்து வெடித்து வரும் நிலையில், பாரிசின் அரசியல் கலக்கம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.
பிரான்சில் உருவாகும் இந்த நெருக்கடி, நாடு மட்டுமின்றி ஐரோப்பா முழுவதையும் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

