பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயர் போல்சோனாரோவிற்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனாதிபதி ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் போல்சோனாரோ மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு 27 ஆண்டு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளனர்.
தேர்தல் முடிவுகளை மாற்ற இராணுவத்தை அழுத்தம் கொடுத்து தலையிட வைக்க முயன்றது, மாற்று “அவசர நிர்வாக அலுவலகம்” உருவாக்கி ஆட்சியை பிடித்து வைத்துக்கொள்ள திட்டமிட்டது, 2023 ஜனவரி 8 அன்று அவரது ஆதரவாளர்கள் தலைநகர் பிரசீலியாவில் அரசு கட்டடங்களை தாக்கி சேதப்படுத்திய சம்பவங்களில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி அதிபர் லுலா டா சில்வா, துணை அதிபர் ஜெரால்டோ ஆல்க்மின் மற்றும் நீதிபதி அலெக்சாந்த்ரி டி மொராயஸை கொலை செய்ய ஆயுதங்கள், வெடிபொருட்கள் அல்லது விஷத்தை பயன்படுத்தும் திட்டங்களையும் தீட்டியிருந்தனர் என போல்சோனாரோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த தீர்ப்பின் மூலம் போல்சோனாரோ அடுத்த 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதியிழக்கிறார்.
இதேவேளை, போல்சோனாரோவின் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.
தீர்ப்புக்கு எதிராக பிரேசிலின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான போல்சோனாரோ ஆதரவாளர்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போல்சோனாரோவின் மகன், செனட்டர் பிளாவியோ போல்சோனாரோ, நீதிபதி மொராயஸை கடுமையாக விமர்சித்து, “ஜனநாயகத்தை காப்பாற்றும் பெயரில், அதன் தூண்களை உடைத்து நிரபராதியை தண்டித்துள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தீர்ப்பை “அதிர்ச்சி அளிப்பதாக” கூறி, பிரேசிலுக்கு 50% சுங்கவரி விதித்திருப்பதாகவும், நீதிபதி மொராயாஸுக்கு தடைகள் விதித்திருப்பதாகவும் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, தீர்ப்பை “நியாயமற்றது” என விமர்சித்துள்ளார்.
ஆனால் பிரேசில் அரசு அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்து, “நாங்கள் அச்சப்பட மாட்டோம்” என மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு நீதிபதி லூயிஸ் ஃபக்ஸ் மட்டுமே போல்சோனாரோவை விடுவிக்க வாக்களித்து, “லுலா டா சில்வா பதவியில் இருந்து அகற்றப்படவில்லை என்பதால் இது புரட்சி அல்ல” என்று கூறினார்.
இந்த தீர்ப்பு 2026 பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்த ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

