முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், துரோகம் மற்றும் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, அரசியலமைப்பின் படி அவர் “தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை பெற தகுதியானவர்” என முன்னாள் இராணுவத் தளபதி தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகிய இடங்களிலிருந்து பல மதிப்புமிக்க அரச சொத்துக்கள் சட்டவிரோதமாக மஹிந்த தனது தனி இல்லத்துக்கு மாற்றியதாக பொன்சேகா, குற்றம்சாட்டினார்.
விஜேராமவிலுள்ள மகிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ இல்லம் ஒப்படைக்க தாமதம் ஏற்பட்டதற்கான அவரது பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வீட்டை பழுது பார்த்து திருத்துவதற்கு ரூ. 500 மில்லியன் செலவழித்த மகிந்த ராஜபக்ஷ, தனக்காக ஒரு தேங்காய் துருவி கூட தன் பணத்தில் வாங்குவாரா என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜேராமா இல்லத்தில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல விலையுயர்ந்த தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன, அவை அரச இல்லங்களிலிருந்து மாற்றப்பட்டவையே என தெரிவித்தார்.
“நான் நீதியமைச்சராக இருந்திருந்தால், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றிலிருந்து விலைமதிப்புள்ள பொருட்களை மாற்றியதற்காக மகிந்த ராஜபக்ஷ மீது வழக்கு தொடர்ந்திருப்பேன் எனவும் 24 மணி நேரத்துக்குள் கைது செய்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ாளர்.
அதேபோல், அரச சொத்துகளின் பட்டியல் (inventory) இல்லாமையை காரணம் காட்டி ராஜபக்ஷ குடும்பம் சொத்துக்களை திருப்பித் தருவதில் தாமதம் செய்கின்றது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“ஒரு வீட்டில் கோட்டாபயா இருந்தார், மற்றொன்றில் மகிந்த இருந்தார். பட்டியல் இல்லையெனில் அவர்கள் தான் பொறுப்பு. அதைக் காரணம் காட்டி பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்கிறார்கள். இதுவே ராஜபக்ஷர்களின் இயல்பு,” எனக் கூறி, மகிந்தாவை “இரத்தம் உறியும் பாம்பு” என அவர் ஒப்பிட்டார்.
பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது, பல ஊழல் வழக்குகள், நீதிமன்ற விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதும், மகிந்த ராஜபக்ஷ இன்னும் மக்களின் வளங்களை சுரண்டி வருகிறார்.
“அரசாங்கம் ஊழலுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொண்டே மகிந்த ராஜபக்ஷ மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த நாட்டைச் சீர்செய்ததாக நாங்கள் நம்ப முடியாது,” எனக் கூறினார்.
போரின் இறுதி கட்டத்தை நினைவுகூர்ந்த அவர், மகிந்தா ராஜபக்ஷ போரின் முடிவில் போர் நிறுத்த உத்தரவிட்டது பிரபாகரனை தப்பிச் செல்ல அனுமதிக்கவே எனக் குற்றஞ்சாட்டினார்.
“போரின் இறுதி நாட்களில் மகிந்த ராஜபக்ஷ ஏன் போர்நிறுத்த உத்தரவிட்டார் என்பதை விளக்க வேண்டும். இது வேறு எந்த நாட்டில் நடந்திருந்தாலும், அவர் துரோகியாகக் கருதப்பட்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டிருப்பார். நமது அரசியலமைப்பின்படி கூட அவர் பெற வேண்டிய தண்டனை தூக்கிலிடுதலே,” எனக் கூறினார்.
மேலும், பொருளாதாரம் முதல் சுங்கத்துறை வரை ராஜபக்ஷ ஆட்சியில் ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு உருவாக்கப்பட்டது என்றும், போர்வீரர்களின் நலன்கள் கூட புறக்கணிக்கப்பட்டன எனவும் தெரிவித்தார்.

