நாட்டின் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அணுகல் சிக்கல்கள் மற்றும் அவசர புகார்களை விரைந்து அறிவிக்க 1904 என்ற சிறப்பு ஹாட்லைன் எண் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இப்போது கீழ்க்காணும் துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளை 1904 எண் மூலம் தெரிவிக்கலாம்:
- மின்சார விநியோகம்
• எரிபொருள் விநியோகம்
• மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சை சேவைகள்
• பொது போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ்
• குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரப் பணிகள்
• உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்
• தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப சேவைகள்
• நீர்ப்பாசனம் மற்றும் வர்த்தமானி அறிவிப்பு எண் 2464/29 இல் குறிப்பிடப்பட்ட பிற அத்தியாவசிய சேவைகள்
இந்தப் புதிய முயற்சி, அவசர நிலைகள் அல்லது சேவை தடங்கல்கள் ஏற்படும் போது மக்களிடமிருந்து கிடைக்கும் புகார்களுக்கு சமயோசிதமான பதில், மேம்பட்ட ஒருங்கிணைப்பு, மற்றும் திறம்பட்ட தீர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
1904 ஹாட்லைனுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் அத்தியாவசிய சேவைகள் செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்ட பின் அவற்றின் அவசரத்தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் துரித நடவடிக்கைக்காக மாற்றி அனுப்பப்படும்.
இந்த அவசர சேவையை பொறுப்புடன் பயன்படுத்தி, சரியான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் கோரியுள்ளது.

