எதிர்வரும் பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு போலி நாணய தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், துணை பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு நாணய தாள் தொடர்பிலும் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அதிக அளவில் போலியாக அச்சிடப்பட்டவை 5,000 ரூபா பெறுமதியான நாணய தாள்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 5,000 ரூபா மதிப்புள்ள 596 போலி நாணய தாள்களை குற்றப்புலனாய்வு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டில் இதுவரை 535 போலி 5,000 ரூபா நாணய தாள்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி நாணய தாள்களை அச்சிடுதல், அவற்றை வைத்திருத்தல் அல்லது அச்சிட பயன்படும் உபகரணங்களை வைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் எச்சரிகை விடுத்துள்ளார்.

